Hot Posts

6/recent/ticker-posts

வவுனியாவில் 31 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது

வவுனியாவில் 31 வயது இளம் குடும்பப் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்பப் பெண் ஒருவரை 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அயலில் வசிக்கும் குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்து, மேற்படி பெண்ணை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

இதனை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி மேற்படி பெண்ணை மீண்டும் பல தடவைகள் அழைத்து அந்த நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான மேற்படி பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பூவரசங்குளம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த போதும், இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த நிலையில் 37 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன, மேலும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments