வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் தன் மகனுக்கு ஹெரோயின் வழங்க முயன்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் (09.03.2025) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இளைஞர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 6 மாதம் புனர்வாழ்வு பெறுவதற்காக வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
4 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அவரை பார்வையிட குருநாகல் குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் தந்தையும், அவரது பொலிஸ் அதிகாரியான தாயும் புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
மகனை சந்தித்தபோது, அவர்களிருந்த இடத்தை நோக்கி மோப்ப நாய் வந்ததை கவனித்த அவர்கள், ஒரு பொதி ஒன்றை வெளியே வீசியுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சோதனை மேற்கொண்டதில், அதில் 240 மில்லி கிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மோப்ப நாய் குறித்த உப பொலிஸ் பரிசோதகரை அடையாளம் காட்டியதால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments