வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை 23 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில், வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்டதில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். மேலும், சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையில், பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா ஆஜராகி, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கக் கோரி மனு சமர்ப்பித்தார். இதனை எதிர்த்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவாதிகள் பிணை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்து, அவர்களின் விளக்கமறியலை நீடிக்க வாதங்கள் முன்வைத்தனர்.
இவ்வமைப்புகளை கருத்தில் கொண்டு, மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால், சந்தேக நபர்களுக்கான விளக்கமறியலை நீடிப்பதற்கான தகுந்த காரணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்படவில்லை என்பதால், குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.
0 Comments